இந்தியா

97 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பின

Published On 2024-01-02 03:33 GMT   |   Update On 2024-01-02 03:33 GMT
  • வாபஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டபோது, ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
  • எந்த தபால் நிலையத்தில் இருந்தும் ‘இந்தியா போஸ்ட்’ மூலமாக ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கலாம்.

மும்பை:

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி, பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அப்போது, புதிதாக 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

கடந்த மே 19-ந் தேதி, அந்த நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அவற்றை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் அல்லது வங்கி கணக்கில் செலுத்தலாம் என்று அறிவித்தது. பின்னர், இந்த கால அவகாசம், அக்டோபர் 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் அந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வாபஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டபோது, ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. கடந்த 29-ந் தேதி நிலவரப்படி, 97.38 சதவீத நோட்டுகள், வங்கிக்கு திரும்பி விட்டன.

மீதி ரூ.9 ஆயிரத்து 330 கோடி மதிப்புள்ள நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் உள்ளன. அவை தொடர்ந்து செல்லுபடி ஆகும்.அந்த நோட்டுகளை ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் நேரடியாக மாற்றிக்கொள்ளலாம் அல்லது எந்த தபால் நிலையத்தில் இருந்தும் 'இந்தியா போஸ்ட்' மூலமாக ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News