இந்தியா

கிறிஸ்தவ கூட்டரங்கில் 3 குண்டுகள் வெடித்தது: ஒருவர் பலி-25 பேர் படுகாயம்

Published On 2023-10-29 06:20 GMT   |   Update On 2023-10-29 06:20 GMT
  • கிறிஸ்தவ வழிபாட்டு அரங்கம் ஒன்றில் ஜெப கூட்டம் நடைபெற்றது.
  • காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கேரள மாநிலம் எர்ணா குளம் பகுதியில் கிறிஸ்தவ கூட்ட அரங்கில் இன்று காலை நடை பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கேரள மாநிலம் எர்ணா குளத்தை அடுத்த கடமாச்சேரியில் ஞாயிற்றுக்கிழமையான இன்று கிறிஸ்தவ வழிபாட்டு அரங்கம் ஒன்றில் ஜெப கூட்டம் நடைபெற்றது. விடுமுறை தினம் என்பதால் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் அதில் பங்கேற்று இருந்தனர்.

2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடியிருந்தனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலதரப்பட்ட மக்கள் ஜெப கூட்டத்தில் பங்கேற்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். அப்போது காலை 9 மணி அளவில் கூட்ட அரங்கில் திடீரென அடுத்தடுத்து 6 குண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறின.

குண்டு வெடித்த இடத்தில் போடப்பட்டிருந்த சேர் உள்ளிட்ட பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன. இதைப் பார்த்து பிரார்த்தனை கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் பீதியும் அதிர்ச்சியும் அடைந்தனர். அனைவரும் உயிர் பிழைப்பதற்காக ஆங்காங்கே சிதறி ஓடினார்கள்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இந்த குண்டு வெடிப்பில் பெண் ஒருவர் உடல் சிதறி பலியானார். 25-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரையும் மீட்டு கொச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News