இந்தியா
பீகாரில் பயங்கர வெடி விபத்து - 7 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்
வெடி விபத்து நிகழ்ந்த வீட்டில் பட்டாசு தயாரிப்பு நடைபெற்றது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பாகர்பூர்:
பீகார் மாநிலம் பாகல்பூரின் டாடர்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பயங்கர வெடி விபத்து நிகழ்ந்தது. இதன் தாக்கத்தால் அந்த வீடு முழுவதும் இடிந்து விழுந்ததுடன், அருகில் இருந்த வீடுகள் சேதமடைந்தன.
இந்த வெடிவிபத்தில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
வெடிச்சத்தம் பல கிலோமீட்டர் தொலைவுக்கு கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். வெடி விபத்து நிகழ்ந்த வீட்டில் இருந்தவர்கள் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த வெடிகளின் தன்மை இன்னும் கண்டறியப்படவில்லை என பகல்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.