இந்தியா
பணி ஓய்வு பெற்ற குதிரையை தட்டிக் கொடுத்த பிரதமர் - குடியரசு தின விழாவில் சுவாரஸ்யம்
சிறப்பான செயல்பாட்டிற்காக, விராட் என்ற அந்த குதிரை ராணுவ தலைமை தளபதியின் சிறப்பு விருதை பெற்றுள்ளது
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்ற முப்படைகளின் அணிவகுப்பை குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
பின்னர் குடியரசுத் தலைவரின் மெய்க்காவலர் பிரிவில் இடம்பெற்றிருந்த ‘விராட்’ என்ற குதிரை பிரதமரின் மோடியின் விருப்பத்தின்பேரில் அருகே அழைத்து வரப்பட்டது. பணியில் இருந்து அந்த குதிரை ஓய்வு பெறுவதை அடுத்து, பிரதமர் மோடி ‘விராட்’குதிரையை தட்டிக் கொடுத்து அதற்கு விடை கொடுத்தார். அருகில் இருந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் அதை ரசித்தனர்.
கடந்த 2003 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரின் மெய்க்காவலர் பிரிவில் விராட் இணைந்தது. இதுவரை 13 முறை குடியரசு தின அணிவகுப்பு ‘விராட்’ பங்கேற்றுள்ளது. கடந்த ஜனவரி 15 அன்று ராணுவ தினத்தை முன்னிட்டு ‘விராட்’குதிரைக்கு ராணுவ தலைமை தளபதியின் சிறப்பு விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.