இந்தியா
கோயிலில் ஆட்டுக்கு பதில் மனிதனின் தலையை வெட்டிய பூசாரி- ஆந்திராவில் அதிர்ச்சி
இறந்துபோன சுரேஷுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சித்தூர்:
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், வலசப்பள்ளியில் எல்லையம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் கடந்த ஜனவரி 16-ம் தேதி நடைபெற்ற சங்கராந்தி விழாவின் போது நேர்த்திக்கடனாக ஆடு, கோழி ஆகியவற்றை பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நள்ளிரவு 12 மணி அளவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அந்த பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஆடு ஒன்றை நேர்திக்கடனாக செலுத்த வந்தார். அவர் ஆட்டின் தலையை குனிந்தபடி பிடித்திருந்தபோது , குடிபோதையில் ஆடுகளை வெட்டிவந்த பூசாரி, ஆட்டுக்கு பதிலாக அதை பிடித்திருந்த சுரேஷின் கழுத்தை அரிவாளால் வெட்டினார். இதில் சுரேஷின் கழுத்து வெட்டப்பட்டது.
ரத்த வெள்ளத்தில் மிதந்த சுரேஷை மீட்டு, ஊர்மக்கள், மதனப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்துபோன சுரேஷுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார்.