இந்தியா
இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் - காங்கிரஸ் கட்சியினருக்கு சோனியா காந்தி வேண்டுகோள்
வெறுப்பு மற்றும் பிரிவினை சிந்தாந்தங்களுக்கு இந்திய சுதந்திர போராட்டத்தில் எந்த பங்கும் இல்லை என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:
இந்திய ஜனநாயகத்தையும், கலாச்சாரத்தையும் காங்கிரஸ் தொண்டர்கள் பாதுகாக்க வேண்டும். காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல. அது ஒரு இயக்கம். அதன் தலைவர்கள் நாட்டின் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு இன்னல்கள் சந்தித்துள்ளனர்.
சிறை தண்டனை அனுபவித்துள்ளனர். தங்கள் வாழ்வையே அவர்கள் இழந்துள்ளனர். ஆனால் நாட்டை பிளவு படுத்தும் வெறுப்பு மற்றும் பிரிவினை சிந்தாந்தவாதிகளுக்கு சுதந்திர போராட்டத்தில் எந்த பங்கும் இல்லை. தற்போது அந்த சிந்தாந்தம் நமது சமூகத்தின் மதசார்பற்ற கட்டமைப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.
சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கு அதன் மதிப்பு தெரிவதில்லை. இந்திய அடித்தளத்தின் மீதே தாக்குதல் நடத்தும் நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்படுகின்றன. நமது பண்பாடு சிதைக்கப்படுகிறது. பொதுமக்கள் பயம் மற்றும் பாதுகாப்பில்லா உணர்வுடன் வாழ்க்கின்றனர். இவ்வாறு சோனியா காந்தி தமது பேச்சின்போது குறிப்பிட்டார்.