இந்தியா
ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதம் பேருக்கு அறிகுறி இல்லை
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள், இருமல் மற்றும் வறட்டு இருமல் ஏற்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
புதுடெல்லி:
இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 415 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள். 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஒமைக்ரான் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது.
ஒமைக்ரான் பாதிப்புக்குள்ளானவர்கள் லேசான பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆபத்தான நிலையில் எந்த ஒமைக்ரான் நோயாளியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒமைக்ரான் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்றவர்களில் 150-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்கள் தொடர்ந்து 14 நாட்கள் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்களிடம் மருத்துவ நிபுணர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர்.
அப்போது ஒமைக்ரான் பாதித்தவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் எந்தவித அறிகுறியும் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. கொரோனா டெல்டா வகை வைரஸ்கள் தாக்கும்போது காய்ச்சல், உடல்வலி, தலைவலி, இருமல் போன்ற அறிகுறிகள் ஏற்படுவதுண்டு.
ஆனால் ஒமைக்ரான் பாதித்தவர்களுக்கு இத்தகைய அறிகுறிகள் இல்லாமல் இருக்கிறது.
உலக அளவில் இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக பாதிப்பு தொண்டையில் ஏற்படுகிறது. தொண்டை அலர்ஜியைதான் மிக முக்கியமான அறிகுறியாக ஒமைக்ரான் பாதிப்புக்கு சொல்கிறார்கள்.
எனவே வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள், இருமல் மற்றும் வறட்டு இருமல் ஏற்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இதையும் படியுங்கள்...ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து மீள சாதாரண சிகிச்சையே போதும்: மருத்துவ நிபுணர்