இந்தியா
மீனுக்கு வீசப்பட்ட வலையில் சிக்கியது முதலை: மக்கள் அச்சம்
ஒடிசாவில் மீன் பிடிக்க வீசிய வலையில் முதலை சிக்கியதால், பொதுமக்கள் அச்சத்திற்கு உள்ளாகினர்.
ஒடிசா மாநிலத்தின் கடலோர மாவட்டம் கென்டிராபாரா. இங்குள்ள பிடர்கனிகா நதியின் கிளை நதியான லூனாவில் மீன்பிடிப்பதற்காக மீனவர் ஒருவர் வலை வீசியுள்ளார். வலைக்குள் பெரிய மீன் ஒன்று சிக்கியிருப்பதாக நினைத்து, கரைக்கு இழுத்து வந்தபோது அது முதலை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு அவர் தகவல் கொடுத்தார். அங்கு சென்ற வனத்துறையினர் அந்த முதலையை மீட்டனர். அந்த முதலைக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறிய அவர்கள், அதை பிடர்கனிகா நதியின் ஆழமான இடத்தில் கொண்டு சென்று விடுவித்தனர்.
இதனிடையே முதலை சிக்கிய தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். உணவு தேடி இந்த பகுதிக்கு வரும் முதலைகள் சில நாட்களில் தங்களது இருப்பிடத்திற்கு திரும்பி விடுவதாக ஒடிசா வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.