இந்தியா
வாக்கு வங்கி அரசியல் செய்யவில்லை -பிரதமர் மோடி
கடந்த 7 ஆண்டுகளில் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் மற்றும் நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். குறிப்பாக 8300 கோடி ரூபாய் செலவில் டெல்லி-டேராடூன் பொருளாதார வழித்தடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சில அரசியல் கட்சிகள் பொதுமக்களை சுயசார்பற்ற நிலைக்கு தள்ளி உள்ளதாக குற்றம் சாட்டினார்.
தமது அரசு வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடவில்லை என்று, பா.ஜ.க. அரசு நாட்டின் வளர்ச்சியை மையமாக கொண்டு செயல்படுவதாகவும் பிரதமர் கூறினார்.
2007ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டுவரை மத்தியில் ஆட்சி செய்த அரசு 288 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே தேசிய நெஞ்சாலை திட்டத்தை செயல்படுத்தியதாகவும், ஆனால் தமது அரசு கடந்த 7 ஆண்டுகளில் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை விரிவுபடுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனா தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் உத்தரகாண்ட மாநிலம் முன்னிலையில் இருப்பதாகவும், இதற்காக மாநில அரசை தாம் பாராட்டுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.