செய்திகள்
ஓய்வறையில் தற்கொலை செய்த கல்லூரி முதல்வர்- சத்தீஸ்கரில் பரிதாபம்
கல்லூரி முதல்வர் நாயக் தற்கொலை செய்வதற்கு முன்பு, எழுதிய குறிப்பை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.
துர்க்:
சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டம், அகிவாரா பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் முதல்வராக பணியாற்றியவர் பி.பி.நாயக் (வயது 60). இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு வந்த நாயக், ஊழியர்களின் ஓய்வறைக்கு சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் அந்த வழியாக சென்ற காவலாளி, ஓய்வறையின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது, அங்கு முதல்வர் நாயக், மின்விசிறியில் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நாயக் இறந்திருந்தார்.
இதுபற்றி போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். நாயக் தற்கொலை செய்வதற்கு முன்பு, எழுதிய குறிப்பை போலீசார் கைப்பற்றினர். அதில் தனது தற்கொலைக்கு காரணம் என மூன்று நபர்களின் பெயர்களை குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
கல்லூரிக்குள் முதல்வர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.