செய்திகள்
தாசில்தார் அறை மேஜையில் பெண் பிணத்தை வைத்து போராட்டம் நடந்த காட்சி

ரூ.5 லட்சம் கேட்டதால் மாரடைப்பில் பெண் மரணம் - பிணத்தை தாசில்தார் அறை மேஜையில் வைத்து போராட்டம்

Published On 2021-10-27 09:12 GMT   |   Update On 2021-10-27 12:03 GMT
மாரடைப்பால் உயிரிழந்த பெண்ணின் 3 மகள்களும் தனது தாயின் பிணத்தை எடுத்துச் சென்று தாலுகா அலுவலகத்தில் உள்ள தாசில்தார் மேஜையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், தர்மாவரம் பட்டணம் அடுத்த பத்தல பல்லியை சேர்ந்தவர் பெத்தண்ணா. இவரது மனைவி லட்சுமி தேவியம்மா (வயது 65). இவர்களுக்கு நாகேந்திரம்மா, லட்சுமியம்மா, ரத்தினம்மா என 3 மகள்கள் உள்ளனர்.

பெத்தண்ணா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். பெத்தண்ணா பெயரில் 5.18 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கணவர் இறந்து விட்டதால், அவரது பெயரில் உள்ள விவசாய நிலத்திற்கான பட்டாவை தனது பெயருக்கு மாற்றி தருமாறு தனது 3 மகள்களுடன் சென்று தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் நாகேந்திரா பட்ட பெயர் மாற்றி தர ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு லட்சுமி தேவிம்மா தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை.ரூ 40 ஆயிரம் வேண்டுமானால் தருவதாக தாசில்தாரிடம் கூறியுள்ளார். ரூ.5 லட்சம் கொடுத்தால் மட்டுமே பட்டா பெயர் மாற்றி தருவதாக தாசில்தார் கறாராகக் கூறிவிட்டார். இதனால் பட்டா பெயர் மாற்றி தரக்கோரி லட்சுமிதேவியம்மா 3 மகள்களுடன் கடந்த ஒரு ஆண்டாக அலைந்து திரிந்து உள்ளார்.

கடந்த திங்கட்கிழமை தனது மகளுடன் சென்று தாலுகா அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போதும் அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில் லட்சுமி தேவியம்மா மாரடைப்பால் பரிதாபமாக இறந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த 3 மகள்களும் சேர்ந்து தனது தாயின் பிணத்தை எடுத்துச் சென்று தாலுகா அலுவலகத்தில் உள்ள தாசில்தார் மேஜையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பத்தலபல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் பட்டா பெயர் மாற்றிதராததால் தனது தாய் மனவேதனையில் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாகவும் அவரது உயிரை மீட்டுத் தருமாறு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தாசில்தார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். பின்னர் தாயின் பிணத்தை தகனம் செய்வதற்காக அவரது மகள்கள் எடுத்துச் சென்றனர் பட்டா பெயர் மாற்றி தராததால் தனது தாயின் பிணத்தை தாசில்தார் மேஜையில் வைத்து அவரது மகள்கள் போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News