செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

பட்டாசு வெடிக்கும் நேரத்தில் தளர்வு கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல்

Published On 2021-09-27 20:43 GMT   |   Update On 2021-09-27 20:43 GMT
பட்டாசு வெடிக்கும் நேரத்தில் தளர்வு கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
புதுடெல்லி:

தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.கணேசன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 4-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம், சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாடு இணை இயக்குநரிடம் கடந்த ஆகஸ்டு 31-ம் தேதி கோரிக்கை மனு அளித்துள்ளது. அதில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, நீரி உருவாக்கிய பசுமைப் பட்டாசுகளை தயாரிக்க சங்கத்தைச் சேர்ந்த ஆலைகள் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 



ஆனால் அதற்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிவகாசியைச் சுற்றியுள்ள 8 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, சங்கத்தின் கோரிக்கை மனு தொடர்பாக விரைவாக முடிவெடுக்க உத்தரவிட வேண்டும். நாட்டின் பன்முக பழக்கவழக்கங்கள், பண்பாடு, சமய சடங்குகளை கருத்தில் கொண்டு பட்டாசு வெடிக்கும் நேரத்தை குறைந்தபட்சம் 6 மணி நேரமாக உயர்த்த உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது.
Tags:    

Similar News