செய்திகள்
அரியானாவில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு -கூடுதல் தளர்வுகள்
அரியானாவில் பார்கள், உணவகங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்கள் 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
சண்டிகர்:
அரியானாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் 2 வாரங்களுக்கு, அதாவது செப்டம்பர் 6ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்று குறைந்து வருவதால் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:
* பார்கள், உணவகங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்கள் 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதி.
* சமூக இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்றினால் அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் திறக்க அனுமதிக்கப்படும்.
* கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நீச்சல் குளங்களை திறக்கலாம்.
* உள்ளரங்கங்களில் 50 சதவீதம் வரை மட்டுமே நபர்களை அனுமதிக்கலாம். உள்ளரங்கங்களில் அனுமதிக்கான உச்சவரம்பு 100 நபர்கள், திறந்தவெளி அரங்கங்களில் உச்சவரம்பு 200 நபர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* பல்வேறு பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், அரசுத் துறைகள் மற்றும் ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் நுழைவுத்தேர்வு மற்றும் ஆட்சேர்ப்புத் தேர்வுகளை நடத்தலாம்.