செய்திகள்
அமரீந்தர் சிங்

நவ்ஜோத் சிங் சித்து பதவியேற்பு விழாவில் அமரீந்தர் சிங் பங்கேற்கிறார்

Published On 2021-07-22 20:27 GMT   |   Update On 2021-07-22 20:27 GMT
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் நியமனம் செய்யப்பட்டார்.
சண்டிகர் :

பஞ்சாப் மாநிலத்தில் முதல் மந்திரி அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அமரீந்தர் சிங்குக்கும், முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே பனிப்போர் நிலவியது.

இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமனம் செய்யப்பட்டார். மேலும், 4 செயல் தலைவர்களும் நியமிக்கப்பட்டனர். அவரது பதவியேற்பு விழா இன்று நடைபெறுகிறது.

இதற்கிடையே, மாநில காங்கிரஸ் தலைவராக சித்து பொறுப்பேற்க உள்ள விழாவில் அமரீந்தருக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.



புதிதாக நியமிக்கப்பட்ட மாநில காங்கிரஸ் செயல் தலைவர்களான குல்ஜித் சிங் நாக்ரா மற்றும் சங்கத் சிங் கில்ஜியான் ஆகியோர் அமரீந்தர் சிங்கை நேற்று சந்தித்தனர். அப்போது அமரீந்தர் சிங்குக்கு விழாவில் பங்கேற்க முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பாக நாக்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் சார்பில் முதல் மந்திரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஏற்றுள்ள முதல் மந்திரி அமரீந்தர் சிங், சித்து பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.
Tags:    

Similar News