செய்திகள்
அரியானாவில் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு
அரியானாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டு, கூடுதல் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சண்டிகர்:
நாடு முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தாக்கம் குறைந்து வருகிறது. இதனால் தொற்று பாதிப்பு அதிகரித்த போது ஊரடங்கு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்த மாநிலங்கள், தற்போது பாதிப்பு குறையத் தொடங்கியதை தொடர்ந்து, படிப்படியாக தளர்வுகளை அளிக்க தொடங்கி உள்ளன.
இந்நிலையில், அரியானா மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், கூடுதல் தளர்வுகளையும் மாநில அரசு அறிவித்துள்ளது.
காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை மால்கள் உள்பட அனைத்துக் கடைகளையும் திறக்க அனுமதி.
உணவு விடுதிகள், பார்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அனுமதி.
கொரோனா வழிகாட்டுதல்கள்படி, பட்டய கணக்காளர் நிறுவனம் (ஐ.சி.ஏ.ஐ) ஜூலை 5 முதல் 20-ம் தேதி வரை அதன் தேர்வுகள் நடத்த அனுமதி.
ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தால் ஹிசாரில் நடைபெற உள்ள பொது நுழைவுத் தேர்வுக்கு (சி.இ.இ) அனுமதி.
அனைத்துக் கடைகளும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதி.
காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மால்கள் திறக்க அனுமதி.
50 சதவீத இருக்கை வசதியுடன் காலை 10 முதல் இரவு 10 மணி வரை உணவகங்கள் மற்றும் பார்கள் திறக்க அனுமதி.
விளையாட்டு வளாகங்கள், ஸ்டேடியங்கள் விளையாட்டு நடவடிக்கைகளுக்கு திறக்க அரசாங்கம் தற்போது அனுமதித்துள்ளது. இருப்பினும், பார்வையாளர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.