செய்திகள்
காஷ்மீரில் சோகம் - பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலி
காஷ்மீரில் பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்த விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ராம்பான் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 44ல் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் ராம்பான் நகரில் இருந்து நீல் ராம்சு நகரை நோக்கி சிலர் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில், எதிர் திசையில் இருந்து வந்த மற்றொரு வாகனத்தின் மீது இந்த வாகனம் மோதி விபத்திற்கு உள்ளானது.
இச்சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விபத்து பற்றி அறிந்த பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் ராம்பானில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது அறிந்து வேதனை அடைந்தேன். அன்பிற்கு உரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் குணமடைந்து விரைவில் திரும்ப வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.