செய்திகள்
விவிஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல்- கிறிஸ்டியன் மைக்கேலின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகைகளில், கிறிஸ்டியன் மைக்கேல், விமானப்படை தளபதியாக இருந்த எஸ்.பி.தியாகி, ராஜீவ் சக்சேனா உள்ளிட்ட பலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இடைத்தரகராக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்படும் பிரிட்டன் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் கிறிஸ்டியன் மைக்கேல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் இரண்டு வழக்குகளிலும் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுக்கள் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், இரண்டு மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகைகளில், கிறிஸ்டியன் மைக்கேல், விமானப்படை தளபதியாக இருந்த எஸ்.பி.தியாகி, ராஜீவ் சக்சேனா உள்ளிட்ட பலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.