செய்திகள்
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சமையல் எண்ணெய் விலை குறைந்து வருகிறது: மத்திய அரசு
பாமாயில் எண்ணெய் 19 சதவீதம் அளவிலும், சூரியகாந்தி எண்ணெய் 16 சதவீதம் அளவிலும் குறைந்துள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தைவிட மே மாதத்தில் சில்லறை பணவீக்கம் அதிகமாக இருந்தது. இதற்கு பெட்ரேல், டீசல் விலை உயர்வு முக்கிய காரணமாக எனக் கூறப்படுகிறது. எரிபொருள் விலையால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது.
குறிப்பாக சமையல் எண்ணெய் விலை அதிக அளவில் கூடியது. ஒரு லிட்டர் பாமாயில் எண்ணெய் 150 ரூபாயை நெருங்கியது. சூரியாகாந்தி எண்ணெய் 180-ஐ தொட்டது.
தற்போது சமையல் எண்ணெய் விலை கணிசமான அளவிற்கு குறைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விலை குறைந்து வருவதாக மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத்திற்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், ‘‘பாமாயில் எண்ணெய் விலை ஒரு கிலோ 115-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் 19 சதவீதம் குறைந்துள்ளது. சூரியகாந்தி எண்ணெய் கிலோ 157-க்கு குறைந்துள்ளது. இதன்மூலம் 16 சதவீதம் குறைந்துள்ளது.
சமையல் எண்ணெயின் விலைகள் சர்வதேச விலைகள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியையும் உள்ளடக்கிய சிக்கலான காரணிகளை சார்ந்துள்ளது. உள்நாட்டு நுகர்வு மற்றும் உற்பத்தி இடைவெளி அதிகமாக இருப்பதால், இந்தியா கணிசமான அளவு சமையல் எண்ணெயை இறக்குமதி செய்கிறது’’ எனத் தெரிவித்துள்ளது.