செய்திகள்
ட்ரோன்கள் மூலம் மருந்து சப்ளை- தெலுங்கானா அரசுடன் கைகோர்த்த பிளிப்கார்ட்
ட்ரோன் அமைப்புகளைப் பயன்படுத்தி பேரிடர் காலங்களில்கூட பொருட்களை வழங்க முடியும் பிளிப்கார்ட் நிர்வாகி கூறி உள்ளார்.
ஐதராபாத்:
கொரோனா வைரஸ் பாதிப்பினால் நகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும் பரவத் தொடங்கியிருக்கிறது. சரியான போக்குவரத்து வசதியில்லாத தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு விரைவாக மருத்துவ சேவைகள் வழங்குவது சவாலான விஷயமாக உள்ளது.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் தொலைதூரப் பகுதிகள் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளுக்கு ட்ரோன் மூலம் தடுப்பூசி மற்றும் மருந்துகளை விரைவாக கொண்டு சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது. பிரபல மின்னணு வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
முதலில் 6 நாட்களுக்கு தடுப்பூசிகளை ட்ரோன் மூலம் அனுப்பி சோதனை நடத்தப்படுகிறது. அதன்பின்னர், முழுமையான அளவிற்கு திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.
இதையும் படியுங்கள்: கடந்த 11 நாட்களில் தடுப்பூசி போடுவது 41 சதவீதம் குறைந்துள்ளது
இதுபற்றி பிளிப்கார்ட் நிறுவனத்தின் சீனியர் துணைத்தலைவர் ரஜ்னீஷ் குமார் கூறுகையில், “மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் இது ஒரு முக்கியமான படி ஆகும். ட்ரோன் அமைப்புகளைப் பயன்படுத்தி பேரிடர் காலங்களில்கூட இதுபோன்று பொருட்களை வழங்க முடியும்” என்றார்.