செய்திகள்
வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி திட்டம்
தெலுங்கானாவில் வெளிநாடு செல்லும் மாணவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் இருந்து படிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்ல உள்ள மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்கான சிறப்பு தடுப்பூசி திட்டம் நேற்று தொடங்கியது.
வெளிநாடு செல்வதற்காக பதிவு செய்துள்ள மாணவர்கள் தங்கள் பாஸ்போர்ட், மாணவர் விசா, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் வழங்கி உள்ள மாணவர் சேர்க்கை கடிதம் ஆகியவற்றுடன் தடுப்பூசி மையங்களுக்கு வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
தகுதிவாய்ந்த மாணவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். இதுவரை 7000 பேர் பதிவு செய்திருப்பதாக ஐதராபாத் தடுப்பு மருந்து நிறுவன இயக்குனர் சங்கர் தெரிவித்துள்ளார்.
முதல் நாளில் மாணவர்களுக்கு 350 டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருப்பதாகவும், பல்வேறு நாடுகளில் கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைக்காததால், மாணவர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.