செய்திகள்
வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை- ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு
நடப்பு நிதியாண்டில் நுகர்வோர் விலை குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் (சிபிஐ) 5.1 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்தார்.
புதுடெல்லி:
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும். இந்த கூட்டத்தில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) மற்றும் வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ) ஆகியவற்றில் செய்யப்படும் மாற்றங்கள் மற்றும் பல்வேறு நிதி கொள்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும்.
அவ்வகையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை குழு மீண்டும் கூடியது. 3 நாட்களாக நடைபெற்ற இக்கூட்டத்தில் நிதிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதங்கள், சர்வதேச பொருளாதார நிலை, பணவீக்கம், ரூபாய் மதிப்பு நிலவரம் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று நிறைவடைந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:-
வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும். இதேபோல் ரிவர்ஸ் ரெப்போ விகிதமும் எந்த மாற்றமும் இல்லாமல் 3.35 சதவீதமாக நீடிக்கிறது.
அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு ஆராய்ந்ததில், 2021-2022ம் நிதியாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விலை குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் (சிபிஐ) 5.1 சதவீதமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முந்தைய ஆய்வுக்கூட்டத்தின்போது, உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 10.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. தற்போது, கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தினால் சரிந்துள்ளது.