செய்திகள்
ரெயில்

ஓடும் ரெயிலில் சிறுமியை கற்பழிக்க முயன்று வெளியே தூக்கி வீசிய கொடூரம்

Published On 2021-06-02 02:21 GMT   |   Update On 2021-06-02 02:21 GMT
கோவா-நிஜாமூதீன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 8 வயது சிறுமியை கற்பழிக்க முயன்று வெளியே தூக்கி வீசிய ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
புனே :

கோவாவில் இருந்து நிஜாமூதீன் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று சம்பவத்தன்று புறப்பட்டு சென்றது. இந்த ரெயிலில் 8 வயதுயுடைய சிறுமி தனது பெற்றோர், தங்கை, அண்ணன் உடன் டெல்லிக்கு சென்று கொண்டிருந்தனர். சிறுமியின் தந்தை முன்னாள் ராணுவ வீரர் ஆவார். அந்த ரெயிலில் ராணுவ வீரர் பிரபு மல்லப்பா(வயது33) என்பவர் பயணம் செய்தார்.

எக்ஸ்பிரஸ் ரெயில் சத்தாரா மாவட்டம் லோனாட்-சல்பா ரெயில் நிலையம் அருகே வந்த போது சிறுமி தனது முன்பதிவு இருக்கையில் அயர்ந்து தூங்கி விட்டாள். அந்த இருக்கை அருகே இருந்த பிரபு மல்லப்பா சிறுமியை நைசாக தூக்கிக்கொண்டு கழிவறைக்கு சென்றார். அங்கு வைத்து சிறுமியை கற்பழிக்க முயன்று உள்ளார். ஆனால் சிறுமி அதிர்ச்சியில் கண்விழித்து சத்தம் போட்டு உள்ளாள்.

இதனால் செய்வது அறியாமல் திகைத்த பிரபு மல்லப்பா அந்த சிறுமியை ஓடும் ரெயிலில் இருந்து கீழே வீசி உள்ளார். இதனால் அந்த சிறுமி படுகாயத்துடன் தண்டவாளம் அருகே நடுகாட்டில் விழுந்து கிடந்தாள். மறுநாள் காலை சிறுமி படுகாயத்துடன் கிடந்ததை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உயிர் பிழைத்தாள். தூக்கி வீசப்பட்டபோது ரெயில் மெதுவாக சென்றதால் அவள் உயிர் பிழைக்க நேர்ந்தது.

இதன்பின் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் ராணுவ வீரர் என்பது மட்டும் தெரியவந்தது. இதனால் போலீசார் அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகளின் விவரங்களை சேகரித்தனர். இதில் சந்தேகம்படும்படியாக 4 பேர் இருந்ததை கண்டுபிடித்தனர்.

இறுதியில் ராணுவ வீரர் பிரபு மல்லப்பாவை போலீசார் கண்டுபிடித்தனர். இவர் பணியின் காரணமாக உத்தரபிரதேசம் ஜான்சிக்கு செல்ல இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் ஜான்சி சென்று அவரை பிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News