செய்திகள்
கேரள சட்டசபையில் உரையாற்றும் ஆளுநர் ஆரிப் முகமது கான்

அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை 50 சதவீதம் உயர்த்த நடவடிக்கை -கேரள ஆளுநர் உரை

Published On 2021-05-28 04:27 GMT   |   Update On 2021-05-28 04:27 GMT
அடுத்த ஐந்து ஆண்டுகளில் காய்கறியில் தன்னிறைவு பெறுவதற்காக, கேரளாவில் காய்கறிகளின் உற்பத்தி அதிகரிக்கப்படும் என்று ஆளுநர் தெரிவித்தார்.
திருவனந்தபுரம்: 

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.  கடந்த 20ம் தேதி புதிய அரசு பொறுப்பேற்றது. மாநில முதல்-மந்திரியாக பினராயி விஜயன் 2வது முறையாக பதவியேற்றார். அவருடன் 20 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றது. 

அதன்பின்னர் 15-வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் எம்எல்ஏக்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மறுநாள் சபாநாயகர் தேர்தல் நடைபெற்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திரிதலா தொகுதி எம்எல்ஏ எம்.பி.ராஜேஷ்  சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன்பின்னர் இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று சட்டசபை மீண்டும் கூடியது. சட்டசபையில் கவர்னர் ஆரிப் முகமது கான் உரையாற்றினார்.  

அவர் தனது உரையில், அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை 50 சதவீதம் உயர்த்த அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார். இந்த நோக்கத்திற்காக வேளாண் நடைமுறைகள் மற்றும் சந்தைப்படுத்தல், புதிய சிறிய அளவிலான உணவு பதப்படுத்தும் தொழில்கள் மற்றும் வேளாண் பூங்காக்களை நிறுவுவதன் மூலம் மதிப்பு கூட்டல் அதிகரிக்கப்படும் என்றும் கூறினார்.



அடுத்த ஐந்து ஆண்டுகளில் காய்கறியில் தன்னிறைவு பெறுவதற்காக, கேரளாவில் காய்கறிகளின் உற்பத்தி அதிகரிக்கப்படும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

இந்த கூட்டம் ஜூன் 14-ந் தேதி வரை நடைபெறும். இந்த கூட்டத்தில் லட்சத்தீவில் தற்போது நிகழ்ந்து வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவாக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த தீர்மானத்திற்கு எதிர்க்கட்சிகள் முழு அதரவு தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ஷாபி பரம்பில் உள்பட உறுப்பினர்கள் ஏற்கனவே கோரிக்கை வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News