செய்திகள்
சிவ்போஜன் இலவச உணவு திட்டம் ஜூன் 14-ந் தேதி வரை நீட்டிப்பு
கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து மக்களுக்கு உதவுவதற்காக இந்த சிவ்போஜன் திட்டத்தின் கீழ் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
மும்பை:
சிவசேனா தலைமையிலான அரசு கடந்த ஆண்டு பதவியேற்றதை தொடர்ந்து மகாராஷ்டிராவில் சிவ்போஜன் என்ற குறைந்த விலையில் மக்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் முலம் கடந்த ஆண்டு ஜனவரி 26-ந் தேதி முதல் 950 மையங்கள் மூலமாக ரூ.10-க்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்தநிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து மக்களுக்கு உதவுவதற்காக இந்த சிவ்போஜன் திட்டத்தின் கீழ் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
தற்போது கொரோனா சங்கிலியை உடைக்க ஊரடங்கு போன்ற கடும் கட்டுப்பாடுகள் போடப்பட்டு உள்ளது. எனவே ஏழை மக்களுக்கு பசியை ஆற்றிவரும் இந்த சிவ்போஜன் திட்டத்தை ஜூன் 14-ந் தேதி வரை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்திற்கான அரசாணை உணவு மற்றும் பொது விநியோக துறையால் வெளியிடப்பட்டு உள்ளதாக முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.