செய்திகள்
கோப்புப்படம்

ஆந்திராவில் இளம்பெண்ணை குத்திக்கொன்று ‘செல்பி’ எடுத்த கணவன்

Published On 2021-05-09 23:50 GMT   |   Update On 2021-05-09 23:50 GMT
ஆந்திராவில் இளம்பெண்ணை குத்திக்கொன்ற நிலையில் கணவன் ‘செல்பி’ எடுத்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நகரி:

ஆந்திராவின் கடப்பா மாவட்டம் ஜம்மலமடு பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது 23). இதே ஊரில் உள்ள திலக் நகரை சேர்ந்த ஹரிபாபு என்பவருடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10-ந்தேதி திருமணம் நடைபெற்றது. மஞ்சுளாவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த ஹரிபாபு மறைத்து வைத்திருந்த கத்தியால் மஞ்சுளாவை சரமாரியாக குத்தி கொலை செய்தார். பின்னர் அதே கத்தியால் தன்னையும் காயப்படுத்தி கொண்டார். அதோடு நிற்காமல் மனைவியின் பிணத்துடன் ‘செல்பி’ எடுத்துக்கொண்ட அவர், மயங்கி வீட்டிற்கு உள்ளேயே விழுந்தார்.

ஒரு நாள் முழுவதும் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது மஞ்சுளா ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பிணத்தின் அருகிலேயே ஹரிபாபு மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது செல்போனை பார்த்தபோது, அவர் தனது இறந்த மனைவியோடு செல்பி எடுத்துக்கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News