செய்திகள்
தொடர்ந்து மிரட்டும் கொரோனா... டெல்லியில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு
தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் அடுத்தடுத்து மரணம் அடைவதால், மருத்துவமனை நிர்வாகங்கள் திணறிவருகின்றன.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டி பதிவாகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் அடுத்தடுத்து மரணம் அடைவதால், மருத்துவமனை நிர்வாகங்கள் திணறிவருகின்றன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு திங்கட்கிழமை காலை 5 மணியுடன் நிறைவடைகிறது. ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஊரடங்கு உத்தரவை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரசால் ஏற்படும் அழிவு தொடர்கிறது. எனவே, ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே ஊரடங்கு ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்படுகிறது என கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை வெளியிட்ட தகவலின்படி டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 27000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 375 பேர் பலியாகி உள்ளனர். 13வது நாளாக டெல்லியில் தினசரி பாதிப்பு 20000ஐ தாண்டியிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டி உள்ளது. இது கடந்த நவம்பர் மாத மத்தியில் இருந்ததை விட இரு மடங்கு அதிகம் ஆகும்.
டெல்லியில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி திங்கட்கிழமை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.