செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

கொரோனா 2வது அலை அடுத்த வாரம் உச்சத்தை எட்டும்- பிரதமரின் அறிவியல் ஆலோசகர் தகவல்

Published On 2021-04-23 06:37 GMT   |   Update On 2021-04-23 06:37 GMT
உருமாறிய கொரோனா தொடர்பாக நாம் கவனமாக இருக்க வேண்டும். பொதுமக்கள் முககவசம் அணிந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கூறி உள்ளார்.
புதுடெல்லி:

பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் விஜயராகவன் கொரோனா பரவல் தொடர்பாக அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே கொரோனா அபாயத்தில் இருந்து தப்பிக்க முடியும்.



நாட்டில் கொரோனா மிக அதிக அளவு பரவுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பொதுமக்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். பெரும்பாலான இடங்களில் பொதுமக்கள் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காதது கவலை தருகிறது.

12 வாரங்களில் கொரோனா உச்சம் பெற்று குறைந்துவிடும். நாட்டில் உள்ள சில மாவட்டங்களில் இதுதொடர்பான ஆய்வு நடந்து வருகிறது. விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

கொரோனா 2-வது அலை இந்த மாத இறுதியில் உச்சம் பெறும். அடுத்த மாதம் (மே) தொடக்கத்தில் இருந்து கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்துவிடும்.

இதற்கிடையே உருமாறிய கொரோனா தொடர்பாக நாம் கவனமாக இருக்க வேண்டும். எனவே பொதுமக்கள் முககவசம் அணிந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

கொரோனா முதல் அலை தந்த பாடத்தில் இருந்து ஆக்சிஜன் பயன்பாட்டை நாம் உணர்ந்துள்ளோம். முன்பு வெண்டிலேட்டர்கள் தேவை என்று கருதினோம். ஆனால் தற்போது அந்த நிலை மாறி உள்ளது.

இதன் விளைவாக தற்போது ஆக்சிஜன் பயன்பாடு அதிகளவு தேவைப்படுகிறது. இதனால் ஆக்சிஜன் தயாரிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன. மாநில அரசுகள் தடுப்பூசிகளை நேரடி கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News