செய்திகள்
தெலுங்கானாவில் ஊரடங்கு அமல்

தெலுங்கானாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்

Published On 2021-04-20 09:30 GMT   |   Update On 2021-04-20 09:30 GMT
தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 5 ஆயிரத்து 926 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத்:

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை அதி தீவிரமடைந்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,53,21,089 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,59,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,761 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,80,530 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,31,08,582 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,54,761 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 20,31,977 சிகிச்சை பெற்றுவருகின்றனர்.



இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்திலும் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 5 ஆயிரத்து 926 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3.61 லட்சமாக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 42 ஆயிரத்து 853 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் தாக்குதலுக்கு அம்மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,856 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் தெலுங்கானாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் (ஏப்ரல் 20) இம்மாத இறுதி வரை (ஏப்ரல் 30) இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இரவு நேர ஊரடங்கு இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமல்படுத்தப்படுகிறது.

இரவு நேர ஊரடங்கின்போது அத்தியாவசிய தேவைகள் இன்று மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை.

Tags:    

Similar News