செய்திகள்
புல்வெளியில் மோதியபடி தரையிறங்கிய ஹெலிகாப்டர் -அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தொழிலதிபர்
கொச்சி அருகே என்ஜின் கோளாறு காரணமாக தனியார் ஹெலிகாப்டர் புல்வெளியில் மோதியபடி தரையிறங்கியது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சியில் கேரள மீன்வள மற்றும் பெருங்கடல் பல்கலைக்கழகம் உள்ளது. இன்று காலையில் இந்த பல்கலைக்கழக மைதானத்தை நோக்கி வந்த தனியார் ஹெலிகாப்டர், பல்கலைக்கழக வளாகம் அருகே பனங்காடு கிராமத்தில் உள்ள புல்வெளியில் திடீரென தரையிறங்கியது.
தரையில் மோதியபடி தரையிறங்கியதால் ஹெலிகாப்டரில் இருந்த பைலட் மற்றும் அதில் பயணித்த என்ஆர்ஐ தொழிலதிபர் யூசுப் அலி ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் கொச்சி கும்பளம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் 5 பேர் காயமின்றி தப்பினர்.
லூலு குரூப் நிறுவன தலைவர் யூசுப் அலி மற்றும் அவரது மனைவி மற்றும் பைலட் உள்ளிட்ட 7 பேர் அந்த ஹெலிகாப்டரில் பயணித்துள்ளனர். கேரள மீன்வள மற்றும் பெருங்கடல் பல்கலைக்கழக மைதானத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்க வேண்டும். ஆனால், திடீரென ஹெலிகாப்டரின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால், நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விபத்து நிகழ்ந்தபோது அப்பகுதியில் கடுமையான காற்றுடன் மழை பெய்ததாக அப்பகுதி மக்கள் கூறி உள்ளனர்.