கேரள சட்டசபை தேர்தலில் தபால் ஓட்டுகளில் முறைகேடு- தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்
திருவனந்தபுரம்:
கேரள சட்டசபை பொதுத் தேர்தல் கடந்த 6-ந்தேதி நடைபெற்றது. இதில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவானது.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் தபால் ஓட்டுப் பதிவில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் மத்திய, மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் கூறியுள்ளது.
கேரள எதிர்கட்சி தலைவர் ஐகோர்ட்டில் புகார் செய்தார். இது தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் கேரள எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- தபால் ஓட்டுகளில் முறைகேடு நடந்துள்ளது. 80 வயதிற்கும் மேற்பட்டவர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டவர்கள் தபால் ஓட்டு போட்டனர்.
தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு தபால் ஓட்டு போட தனி மையங்கள் அமைக்கப்பட்டன. தபாலில் ஓட்டு போட்டவர்களுக்கும், வீடு மற்றும் அலுவலக முகவரியில் தபால் ஓட்டு சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன.
இதனால் இவர்கள் 2 முறை வாக்களித்திருக்க வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக ஐகோர்ட்டில் புகார் செய்துள்ளேன். தேர்தல் ஆணையத்திலும் புகார் கொடுத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.