செய்திகள்
சத்தீஸ்கர் என்கவுண்டர் -உயிர்த்தியாகம் செய்த வீரர்கள் உடலுக்கு மரியாதை செலுத்திய அமித் ஷா
மாவோயிஸ்டுகள் தாக்குதல் தொடர்பாக உள்துறை மந்திரி அமித் ஷா, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் இருவரும் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினர்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுடன் ஏற்பட்ட மோதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 22 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் உள்துறை மந்திரி அமித் ஷா இன்று தனி விமானத்தில் சத்தீஸ்கர் விரைந்தார். அவரை ஜக்தால்பூரில் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் வரவேற்றார். பின்னர், உயிர்த்தியாகம் செய்த பாதுகாப்பு படை வீரர்களின் உடல்களுக்கு இருவரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
மேலும், உள்துறை மந்திரி அமித் ஷா, முதல்வர் பூபேஷ் பாகல் இருவரும் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினர். மாவோயிஸ்டுகள் தாக்குதல் சம்பவம் தொடர்பாகவும், அவர்களை ஒழிக்கும் நடவடிக்கை குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமித் ஷா, ‘மாவோயிஸ்டுகளுக்கு எதிரான இந்த போர் தீவிரமடையும். இறுதியில் வெல்வோம்’ என்றார். கடந்த சில ஆண்டுகளில் காடுகளின் உள்பகுதிகளில் வெற்றிகரமாக முகாம்களை அமைத்துள்ளதாகவும், அதனால் கடும் ஆத்திரமடைந்துள்ள மாவோயிஸ்டுகள் இதுபோன்று தாக்குதல் நடத்துவதாகவும் அமித் ஷா கூறினார்.