செய்திகள்
செப்டம்பருக்கு பிறகு புதிய உச்சம்... இந்தியாவில் ஒரே நாளில் 93,249 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,24,85,509 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. இதனால் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,24,85,509 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 93,249 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்திற்கு பிறகு புதிய தொற்று 93 ஆயிரத்தை கடந்து உச்சத்தை அடைந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 513 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 1,64,623 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1,16,29,289 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 60,048 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 6,91,597 பேர் சிகிச்சையில் உள்ளனர். நாடு முழுவதும் நேற்று வரை 7,59,79,651 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.