செய்திகள்
பகத் சிங் இறுதி சடங்கின் போது எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம்
சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவு தினத்தையொட்டி உருக்கமான தகவல்களுடன் சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
இந்திய விடுதலை போராட்ட வீரர்களான பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோரின் இறந்த தினம் நாடு முழுக்க கடந்த வாரம் அனுசரிக்கப்பட்டது. சரியாக 90 ஆண்டுகளுக்கு முன் மார்ச் 23, 1931 ஆண்டு மூவரையும் பிரிடிஷ் அரசாங்கம் பாகிஸ்தானில் உள்ள லாகூர் மத்திய சிறையில் தூக்கிலிட்டு மரணிக்க செய்தது.
இந்த நிலையில், நூற்றுக்கும் அதிகமானோர் ஒன்றுகூடி நிற்கும் கருப்பு வெள்ளை புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோருக்கு செய்யப்பட்ட இறுதி சடங்குகளின் போது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
விடுதலை போராட்டத்திற்கு உயிரை தியாகம் செய்த மூவரின் வீர செயலை பாராட்டி நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை உருக்கமான தலைப்புடன் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
புகைப்படத்தை இணையத்தில் ஆய்வு செய்ததில், இது 1978 ஆம் ஆண்டு அம்ரித்சரில் நடைபெற்ற மோதலின் போது உயிரிழந்த 13 சீக்கியர்களுக்கு செய்யப்பட்ட இறுதி சடங்கின் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்த புகைப்படம் 2012 முதல் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.