செய்திகள்
கோப்புபடம்

கேரளாவில் ருசிகரம் - பேஸ்புக் நண்பரை சந்திக்க வந்தவருக்கு லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு

Published On 2021-02-08 09:37 GMT   |   Update On 2021-02-08 09:37 GMT
‘பேஸ்புக்’ மூலமாக கிடைத்த நண்பரை சந்திக்க வந்த இடத்தில் கர்நாடகா வாலிபருக்கு லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு விழுந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்டது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் புத்தலத்தானி பரவன்னூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். லாட்டரி ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரது ஏஜென்சியில் பிரபாகரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

பிரபாகரனுக்கும், கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த சோகன் ஹல்ராம் என்பவருக்கும் ‘பேஸ்புக்’ மூலம் பழக்கம் ஏற்பட்டது. அந்த நட்பு காரணமாக தனது ஊருக்கு வருமாறு சோகனை பிரபாகரன் அழைத்துள்ளார்.

அதன்படி சோகன் தனது குடும்பத்தினருடன் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கேரளா வந்து பிரபாகரனின் வீட்டில் தங்கினார். இருவரும் தங்களது தொழில் குறித்து பேசிக்கொண்டனர். அப்போது பிரபாகரன் தனது லாட்டரி ஏஜென்சி தொழில் குறித்து கூறினார்.

மேலும் கேரளா லாட்டரியில் பம்பர் பரிசாக ரூ.1 கோடி வழங்கப்படும் தகவலை தெரிவித்தார். இதையடுத்து பிரபாகரன் மூலமாக 5 பேருக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை வழங்கக்கூடிய லாட்டரி சீட்டை சோகன் ஹல்ராம் வாங்கினார்.

நேற்று இருவரது குடும்பத்தினரும் கேரளாவில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்றனர். பின்னர் சோகன் தனது குடும்பத்தினருடன் கர்நாடகா செல்ல தயாரானார். பிரபாகரன் குடும்பத்தினருடன் பிரியா விடை பெற்று ரெயில் நிலையத்திற்கு சென்றனர்.

இந்நிலையில் சோகன் வாங்கிய லாட்டரிச்சீட்டுக்கு ரூ.1 கோடி விழுந்தது. இது குறித்து அவருக்கு பிரபாகரன் தகவல் தெரிவித்தார். தங்களுக்கு ரூ.1 கோடி பரிசு விழுந்ததால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து சோகன் குடும்பத்தினர் கர்நாடகா செல்லாமல் மீண்டும் பிரபாகரனின் வீட்டிற்கு வந்தனர். பிரபாகரன் மூலமாகவே அது கிடைத்ததால் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News