செய்திகள்
மூவர்ணக்கொடிக்கு மரியாதை செலுத்துவது பற்றி பா.ஜனதா பாடம் எடுக்க தேவையில்லை: விவசாய தலைவர் யுத்விர் சிங்
மூவர்ணக்கொடி மரியாதை பற்றி பா.ஜனதா பாடம் எடுக்க வேண்டாம் என்று விவசாய தலைவர் யுத்விர் சிங் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லி மாநில எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சுமார் 60 நாட்களுக்கு மேலாக அமைதியான முறையில் அவர்களது போராட்டம் நடைபெற்றது. குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடைபெற்றது. அப்போது ஒரு குழுவினர் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டு விவசாய சங்க கொடியை ஏற்றினர்.
இதனால் விவசாயிகள் தேசியக்கொடியை அவமதித்துவிட்டனர் என பா.ஜனதா தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் விவசாயத் தலைவர் யுத்விர் சிங் கூறுகையில் ‘‘மூவர்ணக்கொடிக்கு மரியாதை கொடுப்பது பற்றி பா.ஜனதா பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பாலான விவசாயிகளின் மகன்கள் எல்லையில் போரிட்டு வருகிறார்கள்’’ என்றார்.