செய்திகள்
சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலை ஆவது உறுதி -சிறைத்துறை தகவல்
சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என கர்நாடகா சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பெங்களூரு:
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். அவரது தண்டனை காலம் முடிந்து ஜனவரி மாதம் 27-ந் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று பெங்களூரு சிறை நிர்வாகம் அறிவித்தது.
இதையடுத்து சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகை ரூ.10 கோடியே 10 ஆயிரத்தை பெங்களூரு தனிக்கோர்ட்டில் செலுத்தினார்.
விடுதலை ஆகும் நாள் நெருங்கிய நிலையில் சசிகலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டது. சசிகலா 27ம் தேதி விடுதலை ஆவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் தகவல் வெளியானது. சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு ஏற்பாடுகளை நிறுத்தி வைத்தனர்.
சசிகலாவின் உடல் நலம் தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் இன்று தெரிவித்தது. உடல்நிலை சீராக இருப்பதால், ஐசியு வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என கர்நாடக சிறைத்துறை தெரிவித்துள்ளது. சிறையில் சசிகலா விடுதலை தொடர்பான அனைத்து ஆவண பணிகளும் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை பொது விடுமுறை என்பதால் இன்றே அனைத்து சட்ட நடைமுறைகளையும் முடித்ததாக கூறப்படுகிறது.