செய்திகள்
கோப்பு படம்

இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 150 ஆக உயர்வு

Published On 2021-01-23 16:55 GMT   |   Update On 2021-01-23 16:55 GMT
இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுடெல்லி,

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய புதிய கொரோனா தொற்று பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. இங்கிலாந்தில் இருந்து சொந்த நாடு திரும்பிய பயணிகளால், அந்தந்த நாடுகளில் இந்த தொற்று தடம் பதித்தது தெரியவந்தது.

இந்த வரிசையில் இந்தியாவிலும், இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிய பயணிகளிடம் இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அங்கிருந்து வந்த பயணிகளுக்கு பரிசோதனை தொடர்ந்து வரும் நிலையில், இந்த தொற்று எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி நாடு முழுவதும் 150 பேர் இந்த புதிய உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் அந்தந்த மாநிலங்களில் ஆஸ்பத்திரிகளின் ஒரே அறையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் இந்த நோயாளிகளின் குடும்பத்தினர் மற்றும் தொடர்பாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தொற்றால் ஏற்பட்டு வரும் கடினமான சூழலை கவனமாக கையாளுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News