செய்திகள்
உயிரிழந்த மெசியான், செந்தில்குமார், சாம்சன், நாகராஜ்

கப்பலை மோதவிட்டு 4 மீனவர்கள் கொலை- இலங்கைக்கு மத்திய அரசு கடும் கண்டனம்

Published On 2021-01-22 08:33 GMT   |   Update On 2021-01-22 08:33 GMT
கப்பலை மோதவிட்டு 4 மீனவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இலங்கை தூதரிடம் மத்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

ராமேசுவரம் அருகே கச்சத்தீவு பகுதியில் ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை ரோந்து கப்பல், அந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. மேலும் கடற்படை கப்பலை மீன்பிடி படகில் மோதவிட்டனர்.

இதில் படகு உடைந்து மூழ்கியது. படகில் இருந்த மீனவர்கள் கடலில் தத்தளித்தனர். அவர்களில் 4 மீனவர்களின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை.

இந்தநிலையில் 4 பேரின் உடல்களும் இலங்கை கடற்கரையில் ஒதுங்கியுள்ளன. அவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்று அடித்து கொலை செய்து கடலில் வீசி விட்டதாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

இந்தநிலையில் டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அதிகாரிகள், அங்குள்ள இலங்கை தூதரை அலுவலகத்திற்கு வரும்படி அழைத்தனர். அவரிடம் இந்த சம்பவத்தை இந்தியா கடுமையாக கண்டிப்பதாக கூறினார்கள். மேலும் மத்திய அரசு சார்பில் கண்டன கடிதமும் அவரிடம் வழங்கப்பட்டது.

அதில், இலங்கை அரசு இது போன்ற அத்துமீறல் சம்பவத்தில் ஈடுபட்டது தவறானது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News