செய்திகள்
தற்கொலை

சித்தூர் அருகே கல்லூரி மாணவியை கொலை செய்த பிளஸ்-2 மாணவன் தற்கொலை

Published On 2021-01-21 07:42 GMT   |   Update On 2021-01-21 07:42 GMT
சித்தூர் அருகே காதல் திருமணம் செய்த மாணவியை கொலை செய்துவிட்டு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி:

சித்தூர் அடுத்த பெனுமூர் தூர்பள்ளியை சேர்ந்தவர் சண்முகம் மகள் காயத்ரி (வயது 19). கல்லூரி மாணவி. பூதலபட்டு சித்தமாகுல பள்ளியை சேர்ந்தவர் டெல்லி பாபு (வயது 17). பிளஸ் 2 மாணவன். காயத்ரியும், டெல்லி பாபு இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருவரும் அங்குள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டு அவரவர் வீட்டுக்கு சென்று விட்டனர். இவர்களது காதல் திருமணம் குறித்து அவர்களது பெற்றோர்களுக்கு தெரிய வந்தது.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதல் திருமணத்திற்கு இருவரது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் காயத்ரிக்கு வேறு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த டெல்லிபாபு தனக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என எண்ணி விவசாய நிலத்துக்கு சென்ற காயத்ரியை வழிமறித்து கத்தியால் குத்தி கழுத்தை அறுத்து விட்டு தப்பி சென்றார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த காயத்ரியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த காயத்ரியின் உறவினர்கள் டெல்லி பாபு வீட்டை அடித்து நொறுக்கி தீவைத்து கொளுத்தினர். இதுகுறித்து பூதலபட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து டெல்லி பாபுவை தேடி வந்தனர்.

இந்த நிலையில் போலீஸ் விசாரணைக்கு பயந்து நேற்று இரவு சித்தமாகுல பள்ளியில் உள்ள மரத்தில் டெல்லி பாபு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பூதலபட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று டெல்லிபாபு பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சித்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காதல் திருமணம் செய்த மாணவியை கொலை செய்துவிட்டு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News