செய்திகள்
பிரதமர் மோடி

தடுப்பூசி போடும் பணியை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி... முதல் நாளில் 3 லட்சம்

Published On 2021-01-14 09:24 GMT   |   Update On 2021-01-14 09:24 GMT
நாடு முழுவதும் நாளை மறுநாள் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. முதல் நாளில் சுமார் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் நாளை மறுநாள் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதிலும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நாளை மறுநாள் தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். 

நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் மேலும் கூறியதாவது:-

தடுப்பூசி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார். முதல் நாளில் சுமார் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. 

முதலில் 3000 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெறும். அதன்பின்னர் படிப்படியாக மையங்களின் எண்ணிக்கை 5000 ஆக உயர்த்தப்படும். தேவைப்பட்டால் மேலும் அதிகரிக்கப்படும். ஒவ்வொரு மையத்திலும் தினமும் 100 பேருக்கு தடுப்பூசி போடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

முதற்கட்டமாக 3 கோடி சுகாதார பணியாளர்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பிற முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும். அதன்பின்னர் 50 வயதுக்கு மேற்பட்ட 27 கோடி நபர்களுக்கு செலுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News