செய்திகள்
ஜேபி நட்டா கொரோனாவில் இருந்து விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் - மம்தா பானர்ஜி டுவீட்
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா-வுக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா:
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கடந்த 10-ம் தேதி மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசார பயணத்தை மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் பயணம் செய்த வாகனம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசுக்கும் மேற்குவங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜிக்கும் இடையே அரசியல் ரீதியில் மோதல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஜேபி நட்டாவின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக மேற்குவங்காளத்தில் பணியாற்றி வரும் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய பணிக்கு மாற்றி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
ஆனால், உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை ஏற்க மறுத்துள்ள மேற்குவங்காள மம்தா அரசு 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் விடுவிக்க முடியாது என தெரிவித்துள்ளது. இதனால், மோதல் மேலும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.
இதற்கிடையில், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா-வுக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தனது வீட்டிலேயே தனிமைபடுத்திக்கொண்டுள்ளார்.
இதையடுத்து, வைரஸ் பாதிப்பில் இருந்து நட்டா விரைவில் குணமடைய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மேற்குவங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜியும் வைரஸ் பாதிப்பில் இருந்து ஜேபி நட்டா விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மம்தா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
’பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா-வுக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது என்ற தகவலை கேள்விப்பட்டேன். அவர் வைரஸ் பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். இந்த சமயத்தில் அவருடனும் அவரது குடும்பத்தினருடனும் எனது பிரார்த்தனைகள் உள்ளன’
என தெரிவித்துள்ளார்.
Heard about BJP National President Shri @JPNadda testing positive for COVID-19. Wishing him a speedy recovery and good health. My prayers are with him and his family during this time.
— Mamata Banerjee (@MamataOfficial) December 13, 2020