செய்திகள்
கைது

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்- பெங்களூருவில் வட மாநில மாணவர்கள் 3 பேர் கைது

Published On 2020-12-13 07:01 GMT   |   Update On 2020-12-13 07:01 GMT
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வட மாநில மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு:

பெங்களூரு, ஒயிட்பீல்டு பகுதியை சேர்ந்தவர்கள் ஷைத்ரா, பூஜா மற்றும் மது. இவர்கள் 3 பேரும் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர நுழைவு தேர்வு (நீட்) எழுதினர். தேர்வில் வெற்றி பெற்று எம்.பி.பி.எஸ். படிக்க தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் 3 பேரும் நேர்காணலில் கலந்துகொண்டனர். இதை தொடர்ந்து கல்லூரியில் சேர்வதற்காக, மல்லேசுவரத்தில் உள்ள தேர்வாணையத்தில் ஆவணங்கள் ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.

அப்போது, கொல்கத்தாவை சேர்ந்த பட்டாச்சாரியா(வயது24), பாட்னாவை சேர்ந்த ‌ஷரீக் கான்(30) உள்பட 3 பேரின் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது தேர்வு எழுதியவர்களின் பெயர் மற்றும் கல்லூரியில் சேர வந்தவர்களின் ஆவணங்களை ஆய்வு செய்த போது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து தேர்வாணைய அதிகாரி மல்லேசுவரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஆள் மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர முயன்ற 3 பேரை கைது செய்தனர்.

இதை தொடர்ந்து நீட் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்ற ஒயிட்பீல்டு பகுதியை சேர்ந்த ஷைத்ரா, பூஜா மற்றும் மது ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், தேர்வு எழுதிய 3 பேரும் தங்களுக்கான எம்.பி.பி.எஸ். இடத்தை விட்டுக்கொடுக்க தலா ரூ.10 ஆயிரம் கொடுப்பதாக வட மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் கூறியதாகவும், இதனால் 3 பேரும் வட மாநில மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் சீட்டை விட்டுக்கொடுத்ததும் தெரியவந்தது.

எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர ஆள் மாறாட்டம் செய்த 6 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News