செய்திகள்
பிரதமர் மோடி

விவசாயிகள் போராட்டம்- மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Published On 2020-12-05 07:52 GMT   |   Update On 2020-12-05 07:52 GMT
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது வீட்டில் மத்திய மந்திரிகளுடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி:

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று 10-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நீடிக்கிறது.

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 4 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. இந்த வாரத்தில் மட்டும் நடந்த 2 சுற்று பேச்சுவார்த்தையிலும் எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை.

இன்று பிற்பகலில் விவசாய அமைப்பினருடன் மத்திய மந்திரிகள் குழு 5-வது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்துகிறது.

இந்த நிலையில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பிரதமர் மோடி தனது வீட்டில் மத்திய மந்திரிகளுடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங், வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர், ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அவர்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

வேளாண் சட்டங்களில் முக்கியமான திருத்தங்கள் கொண்டுவரப்படலாம்.

Tags:    

Similar News