செய்திகள்
மம்தா பானர்ஜி

பிரதமர் கேர்ஸ் நிதி எங்கே போனது? பா.ஜனதா அரசியல் கட்சி அல்ல, பொய்களின் குப்பை - மம்தா பானர்ஜி காட்டம்

Published On 2020-12-01 16:05 GMT   |   Update On 2020-12-01 16:05 GMT
பிரதமர் கேர்ஸ் நிதி எங்கே போனது எனத் தெரியுமா? பா.ஜனதா அரசியல் கட்சி அல்ல, பொய்களின் குப்பை என மம்தா பானர்ஜி கோபமாக கூறி உள்ளார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.  அடுத்த ஆண்டு மே மாதத்தில் அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி காய்களை நகர்த்தி வருகிறார்.

அதேசமயம், ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் பா.ஜனதாவும் வரிந்து கட்டி வருகிறது. மம்தா பானர்ஜிக்கு எதிராக கடும் பிரசாரம் செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சியும், இடதுசாரிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை இப்போதே தொடங்கி விட்டன. இன்னும் 5 மாதங்கள் மட்டுமே தேர்தலுக்கு இருக்கும் நிலையில் அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. ஒவ்வொரு கட்சித் தலைவரும் காட்டமான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மேற்கு வங்காள அரசின் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்துக்குப் பின் முதல்வர் மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

மத்தியில் ஆளும் பா.ஜனதாவின் விருப்பத்துக்கு ஏற்ப, அவர்கள் சொல்வதைப்போல் மேற்கு வஙகாளத்தில் ஆளும் என்னுடைய தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு பணியாற்றாது. நான் கேட்கிறேன் பிரதமர் கேர்ஸ் நிதி மூலம் திரட்டப்பட்ட நிதி எங்கே போனது? யாருக்காவது, பிரதமர் கேர்ஸ் நிதி எங்கே போனது எனத் தெரியுமா? 

லட்சக்கணக்கான கோடி மதிப்பிலான பணம் எங்கே போனது? எதற்காக எந்த விதமான தணிக்கையையும் பிரதமர் கேர்ஸ் அமைப்பில் செய்யவில்லை. கொரோனா வைரஸை எதிர்த்து நாம் போராட பிரதமர் கேர்ஸ் அமைப்பு நமக்கு என்ன கொடுத்திருக்கிறது?

எங்கள் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பற்றி மத்திய அரசு குறை கூறுகிறது. பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் எங்கள் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாகவே உள்ளது.

மத்திய விசாரணை அமைப்புகளை கையில் வைத்துக்கொண்டு நாட்டின் கூட்டாட்சி அமைப்பு முறையை மத்திய அரசு சிதைத்து வருகிறது. இதற்கெல்லாம் நான் அச்சப்பட மாட்டேன். பா.ஜனதா அரசியல் கட்சி அல்ல, பொய்களின் குப்பை.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
Tags:    

Similar News