செய்திகள்
அசாம் முன்னாள் முதல்மந்திரி தருண் கோகாய் காலமானார்
மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அசாம் முன்னாள் முதல்மந்திரி தருண் கோகாய் இன்று உயிரிழந்தார்.
கவுகாத்தி:
அசாம் மாநில முதல்மந்திரியாக 3 முறை பதவி வகித்தவர் தருண் கோகாய் (82). காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கோகாய்க்கு கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோகாய் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்ததையடுத்து கடந்த அக்டோபர் 25-ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதற்கிடையில், கடந்த 1-ம் தேதி அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் மற்று மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனால், கடந்த சில நாட்களாக தருண் கோகாய் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால், அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தீவிர சிகிச்சை பெற்றுவந்த தருண் கோகாய் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார். இந்த தகவலை அசாம் சுகாதாரத்துறை மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
தருண் கோகாயின் மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.