செய்திகள்
பீகாரில் குற்றங்கள் குறைந்துள்ளது - சொல்கிறார் நிதிஷ்குமார்
பீகாரில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது என அம்மாநில முதல்மந்திரி நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பாட்னா:
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது.
இதில் முதல்மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா இணைந்த கூட்டணி அமைத்துள்ளது.
இந்த கூட்டணியை எதிர்த்து ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி இணைந்த மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
இதேபோல் ஆளும் என்டிஏ கூட்டணியில் இருந்து பிரிந்த லோக் ஜனசக்தி கட்சி தனித்து போட்டியிடுகிறது. ஆனாலும் பாஜகவுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கிறது.
இதற்கிடையில், கடந்த சில தினங்களாக அரசியல் தலைவர்களின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், அம்மாநிலத்தின் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள சக்ரவிதான் தொகுதியில் முதல்மந்திரி நிதிஷ்குமார் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
பீகாரில் குற்றச்சம்வங்கள் குறைந்துள்ளது. அரசு தகவலின்படி அதிக குற்றங்கள் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் பீகார் 23-வது இடத்தில் உள்ளது. நாங்கள் பணி செய்யவே தீவிர ஆர்வமுடன் உள்ளோமே தவிர எங்கள் சுய லாபத்திற்காக அல்ல.
எந்த வித அறிவும், அனுபவமும் இல்லாத சிலர் அவர்களது ஆலோசகர்களின் பேச்சைக்கேட்டு எனக்கு எதிராக பேசுகின்றனர். எங்களுக்கு பிரசாரங்களில் பங்கேற்பதில் பெரிய அளவில் விருப்பம் இல்லை. பீகாரை நாங்கள் ஒரு குடும்பமாக பார்க்கிறோம். ஆனால், சிலருக்கு ரத்த சொந்தம் மட்டுமே குடும்பமாக தெரிகிறது.
என்றார்.