செய்திகள்
மரணம்

இறந்த பெண்ணின் உடலை 3 நாட்கள் ஆஸ்பத்திரியில் வைத்திருந்த மகன்கள்

Published On 2020-10-20 02:10 GMT   |   Update On 2020-10-20 02:10 GMT
பெலகாவியில் அடக்கம் செய்ய பணம் இல்லாததால் 3 நாட்களாக பெண்ணின் உடல் ஆஸ்பத்திரியிலேயே வைத்திருந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பெலகாவி :

பெலகாவி அருகே கணேசபுரா கிராமத்தை சேர்ந்தவர் பாரதி(வயது 50). இவருக்கு கடந்த 14-ந் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பாரதியை அவரது 2 மகன்களும் மீட்டு சிகிச்சைக்காக, பெலகாவி பீம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 16-ந் தேதி இரவு பாரதி இறந்தார்.

பாரதி இறந்தது பற்றி அவரது மகன்களிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். அப்போது கொரோனா ஊரடங்கால் எங்களுக்கு வேலை போய் விட்டது. தாயின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லை. இதனால் பணத்தை ஏற்பாடு செய்யும் வரை தாயின் உடலை ஆஸ்பத்திரியில் வைத்து கொள்ளுங்கள் என்று பாரதியின் மகன்கள் கூறினர். இதனால் பாரதியின் உடல் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது.

இதுபற்றி அறிந்த தேவைப்படுவர்களுக்கு உதவி என்ற அமைப்பை சேர்ந்தவர்கள், பாரதியின் மகன்களிடம் தாயின் உடலை அடக்கம் செய்ய பணம் தருவதாக கூறினர். இதையடுத்து பாரதியின் உடல் நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டு, அப்பகுதியில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அடக்கம் செய்ய பணம் இல்லாததால் 3 நாட்களாக பெண்ணின் உடல் ஆஸ்பத்திரியிலேயே வைத்திருந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News