செய்திகள்
கங்கை அஸ்தி

ஒரே நாளில் கங்கையில் 4,900 பேரின் அஸ்தி கரைப்பு

Published On 2020-10-05 20:28 GMT   |   Update On 2020-10-05 20:28 GMT
கங்கையில் சுமார் 4,900 பேரின் அஸ்தி, ஒரே நாளில் கரைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.
புதுடெல்லி:

டெல்லியை தலைமையகமாக கொண்டு செயல்படும் ‘தேவோதன் சேவா சமிதி’ என்கிற தன்னார்வ அமைப்பினர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் தகனம் செய்யப்படும் அனாதை பிணங்களின் அஸ்தியை சேகரித்து கங்கையில் கரைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்து தர்மத்தின்படி இறந்தவரின் சாம்பலை கரைப்பதால் அவர்களது ஆத்மா சாந்தி அடையும் என்ற நோக்கத்தில் இந்த பணியை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தின் இடையில் இருந்து செப்டம்பர் மாதம் வரை அவர்களால் அனாதை பிணங்களின் அஸ்தியை சேகரிக்க முடியவில்லை.

இந்த நிலையில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு அவற்றை சேகரித்தனர். இந்த வகையில் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார தகன பகுதிகளில் மொத்தம் 4 ஆயிரத்து 896 அனாதை பிணங்களின் அஸ்தி பைகள் சேகரிக்கப்பட்டன. பின்னர் தன்னார்வ அமைப்பினர் அவற்றை ஹரித்துவாருக்கு எடுத்துச் சென்று, வேதங்கள் முழங்க கங்கை நதியில் கரைத்தனர்.

சுமார் 4,900 பேரின் அஸ்தி, ஒரே நாளில் கங்கையில் கரைக்கப்பட்ட இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.
Tags:    

Similar News