செய்திகள்
காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலுக்கு கொரோனா தொற்று உறுதி
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அகமது படேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
தினசரி நோய்த்தொற்று ஒரு லட்சத்தை எட்டிய நிலையில், தற்போது குறையத் தொடங்கி உள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 63 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 98,678 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 52,73,202 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு அனைத்துக் கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அகமது படேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன் என அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.