செய்திகள்
தேசிய குற்ற ஆவண காப்பகம்

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7 சதவீதம் அதிகரிப்பு

Published On 2020-09-30 07:03 GMT   |   Update On 2020-09-30 07:03 GMT
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7 சதவீதம் அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன்.
புதுடெல்லி:

இந்தியாவில் 2019 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக 4,05,861 குற்றங்கள் பதிவாகியுள்ளன, ஒவ்வொரு நாளும் சராசரியாக 87 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. இது 2018 ஆம் ஆண்டைவிட  ஏழு சதவீதத்திற்கும் மேலானது என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரம் காட்டுகிறது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) வெளியிட்டுள்ள "இந்தியாவில் குற்றங்கள் -2019" அறிக்கையில்  கடந்த ஆண்டைவிட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7.3 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்.சி.ஆர்.பி., நாடு முழுவதும் இருந்து குற்றத் தரவுகளை சேகரித்து ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் 53 பெருநகரங்களில் இருந்து தரவுகளை சேகரித்த பின்னர் மூன்று தொகுதி அறிக்கையை நிறுவனம் தொகுத்துள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையில் மேலும் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஒரு லட்சம் பெண்கள் மக்கள் தொகையில் பதிவு செய்யப்பட்ட குற்ற விகிதம் 2019 ஆம் ஆண்டில் 62.4 சதவீதமாக உள்ளது, இது 2018 ஆம் ஆண்டின் 58.8 சதவீதத்திலிருந்து அதிகரித்துள்ளது.

2018 ஆம் ஆண்டில் நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 3,78,236 பதிவாகியுள்ளன.

2018 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 33,356 கற்பழிப்புகள் பதிவாகியுள்ளன, இது 2017 ஆம் ஆண்டில் 32,559 ஆக இருந்தது.

2019 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக 4,05,861  குற்றங்கள் பதிவாகியுள்ளன.

இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்குகளில் பெரும்பாலானவை 'கணவர் அல்லது அவரது உறவினர்களால் கொடுமை' (30.9 சதவீதம்), பெண்கள் மீதான தாக்குதல்' (21.8 சதவீதம்), பெண்கள் கடத்தல் (17.9 சதவீதம்).

பெண்கள் மட்டுமல்ல, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுடன் தொடர்புடைய வழக்குகளும் அதிகரித்து உள்ளன. 2018 ஆண்டடைவிட 2019ஆம் ஆண்டில்  குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 4.5 சதவீதம் அதிகரித்துள்ளன.

2019 ஆம் ஆண்டில் குழந்தைகள் மீதான குற்றங்கள் மொத்தம் 1.48 லட்சம்  பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 46.6 சதவீதம் கடத்தல் வழக்குகள் மற்றும் 35.3 சதவீத வழக்குகள் பாலியல் குற்றங்கள் தொடர்பானவை.

மேற்கு வங்கம் சமீபத்திய தரவுகளைப் பகிரவில்லை, அதனால்தான் 2018 தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலின் போது புள்ளிவிவரங்களை சேகரிக்கும் பணியை  மேற்கொண்ட அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா நன்றி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News